திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.3½ லட்சம் அபராதம் வசூல்
சென்னை திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு குழு தலைவர் கமல் கிஷோர் நேற்று கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து திருவொற்றியூர் மேட்டு தெரு, காமராசர் தெருவில் உள்ள கட்டுப்பாட்டு பகுதியில் மக்களிடம் குறைகள் எதாவது உள்ளதா? என்று கேட்டறிந்தார்.அப்போது மண்டல அலுவலர் தேவேந்திரன், செயற்பொறியாளர் பால் தங்கத்துரை, மண்டல நல அலுவலர் இளஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா விதிமீறல், முககவசம் அணியாதது, கைக்கிருமி நாசினி பயன்படுத்தாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களிடம் இருந்து கடந்த ஒரு வாரத்தில் ரூ.3½ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் மட்டும் வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.25,400 அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.