மாவட்டத்தில் புதிய உச்சமாக 519 பேருக்கு கொரோனா - ஈரோட்டில் முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 519 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

Update: 2021-04-30 22:33 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 519 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
519 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. 
கடந்த சில நாட்களாக 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிய உச்சமாக 519 பேருக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 239 ஆக உயர்ந்தது.
முதியவர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 161 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 277 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 17 ஆயிரத்து 880 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 198 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்