திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கொரோனா நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம்; நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Update: 2021-05-01 05:22 GMT

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், நகர் பகுதிகள் போன்ற பகுதிகளில் நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஐ.ஆர்.என். அவென்யூ, எம்.ஜி.ஆர்.நகர், ஜட்ஜஸ் காலனி, ஆசூரி தெரு, வரதராஜபுரம், என்.ஜி.ஓ. காலனி, வி.எம்.நகர், ஜெயா நகர் போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் ஆங்காங்கே நடத்தப்பட்ட முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இப்பணியினை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்