தலைவாசல் அருகே மின்னல் தாக்கி பட்டதாரி வாலிபர் பலி

தலைவாசல் அருகே மின்னல் தாக்கி பட்டதாரி வாலிபர் பலியானார்.

Update: 2021-05-01 19:55 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே சித்தேரி பள்ளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி, விவசாயி. இவருடைய மகன் பூபதி (வயது 28). பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு என்பதால் சி்த்தேரி பள்ளக்காட்டுக்கு வந்த அவர் வீட்டில் இருந்தே ஆன்லைனில் வேலை செய்து வந்தார். 
நேற்று மாலை 5.30 மணியளவில் தலைவாசல் பகுதியில் இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் பூபதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆறகளுர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் பூபதி இறந்து விட்டதாக தெரிவித்தார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

மேலும் செய்திகள்