லாரி- மினி வேன் மோதல்; டிரைவர் பலி

புளியங்குடி அருகே லாரியும், மினி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-05-01 20:22 GMT
புளியங்குடி, மே:
கேரளாவில் இருந்து மரத்தடிகளை ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை லாரி ஒன்று புளியங்குடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. புளியங்குடி- சங்கரன்கோவில் ரோட்டில் தனியார் பள்ளி அருகே வந்தபோது, எதிரே சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி நோக்கி சரக்கு ஏற்றி வந்த மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லோடு வேனை ஓட்டி வந்த ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மதியழகன் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதே வேனில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி (32) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் புளியங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயமடைந்த சங்கரபாண்டியை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கேரள மாநிலம் கொட்டாரக்கரையை சேர்ந்த பிரகாஷ் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்