திருச்செங்கோட்டில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்செங்கோட்டில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-05-01 23:46 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி அபிநயா என்ற மனைவியும், 2 வயதில் மகனும், ஒரு வயதில் மகளும் உள்ளனர். இளவரசன் கூட்டப்பள்ளி காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் மேல் மாடியில் 2 குடும்பத்தினரும் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இளவரசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், ராயர்பாளையத்தை அடுத்த மோளியப்பள்ளியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். இதனிடையே நேற்று இளவரசன் வீட்டின் குளியலறை ஜன்னல், கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக இளவரசனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
15 பவுன் நகை திருட்டு
இதையடுத்து அங்கு விரைந்து வந்த இளவரசன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகைகள், ரூ.8ஆயிரம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 
அதன்பேரில் அங்கு வந்த போலீசார் வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிகுதித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், குளியலறையின் ஜன்னல் கண்ணாடிகளை அப்புறப்படுத்தி அதன் வழியாக சென்று, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்ததும், பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 15 பவுன் நகை, ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றதும் தெரியவந்தது. 
வலைவீச்சு
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குளியலறை கதவு, பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். திருட்டு குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
ஆள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு பகுதியில் கதவை உடைத்து 15 பவுன் நகை, ரூ.8 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்