கோவில்பட்டியில் தனியார் கல்லூரி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

கோவில்பட்டியில், தனியார் கல்லூரி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-02 13:01 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த முடுக்கு மீண்டான்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் இளையராஜா (வயது 55). தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்த இவருக்கு சுகர், பிரசர், இளைப்பு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இளையராஜாவின் மனைவி சீதாலட்சுமி அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு, திரும்பிவந்து பார்த்த போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம். கதவை தட்டியும் திறக்காததை அடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இளையராஜா தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புதூர் போலீசார், அவரது சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்