22 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

பட்டிவீரன்பட்டி அருகே 22 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-02 13:41 GMT
பட்டிவீரன்பட்டி:

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு முத்தாலம்மன் கோவில் சாலையில், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு தங்கபாண்டி, போலீஸ்காரர் முனீஸ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சாக்குமூட்டையுடன் வந்தனர்.
 
போலீசாரை கண்டதும் அவர்கள், வேறு வழியாக திரும்பி சென்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் 2 பேர், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். 

மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், அய்யம்பாளையத்தை சேர்ந்த நவநீதன் (வயது 34) என்று தெரியவந்தது. 

அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், நவநீதனை பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நவநீதனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்