தரங்கம்பாடி பகுதியில் பரவலாக மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
தரங்கம்பாடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொறையாறு:-
தரங்கம்பாடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை வெயில்
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும் வெயிலின் தாக்கத்தை உணர முடிவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மின்விசிறிகள் இயங்கினாலும் சூடான காற்றே வீசுகிறது. வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை மக்கள் நாடி சென்று வருகின்றனர். இளநீர், நுங்கு, வெள்ளரிப்பழங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை முன்பை விட அதிகரித்து காணப்படுகிறது.
பரவலாக மழை
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அரை மணிநேரம் நீடித்த மழையால் பல நாட்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் சற்று தணிந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தரங்கம்பாடி, செம்பனார்கோவில், பொறையாறு, காட்டுச்சேரி, காழியப்பநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைக்கு பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.