கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

அன்னூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-03 18:18 GMT
அன்னூர்

அன்னூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

கல்லூரி மாணவர் 

அன்னூர் அருகே உள்ள பச்சாபாளையம் உருமண்டம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

இவருடைய மகன் பிரசாந்த் (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக தற்போது கல்லூரி மூடப்பட்டு உள்ளதால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தார். 

கடந்த 3 நாட்களாக பிரசாந்த் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். 

தூக்கில் தொங்கினார் 

இந்த நிலையில் தனது அறைக்கு சென்ற பிரசாந்த், கதவை பூட்டிக் கொண்டார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை.

இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்குள்ள மின்விசிறியில் அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் விசாரணை 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரசாந்த் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இது குறித்து போலீசார் கூறும்போது, பிரசாந்த், கடந்த சில நாட்களாக பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். எனவே அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். 

மேலும் செய்திகள்