தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2021-05-03 18:28 GMT
குன்னூர்,

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர்.

விலை உயர்வு 

அதன்படி கடந்த 29, 30-ந் தேதிகளில் விற்பனை எண் 17-க்கான தேயிலைத்தூள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 23 லட்சத்து 32 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 16 லட்சத்து 3 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 7 லட்சத்து 29 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

ஏலத்தில் 19 லட்சத்து 84 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 86 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் மதிப்பு ரூ.23 கோடியே 31 லட்சம். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் ரூ.3 விலை உயர்வு ஏற்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.296, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.300 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.98 முதல் ரூ.104 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.155 முதல் ரூ.186 வரை ஏலம் போனது.

டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.96 முதல் ரூ.104 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.151 முதல் ரூ.200 வரை விற்பனையானது. தேயிலைத்தூள் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அடுத்த ஏலம்(விற்பனை எண்-18) வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 20 லட்சத்து 81 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்