செத்த ஆட்டை வாங்கி வந்ததால் தகராறு; தம்பி குத்திக் கொலை

தம்பியை கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்

Update: 2021-05-03 21:32 GMT
தா.பேட்டை
தா.பேட்டை அருகே உள்ள அமராவதி சாலை கிராமத்தில் வசித்து வருபவர் செல்லையா. இவருக்கு 3 மகன்கள். அவர்களில் இளையமகன் லாரி டிரைவரான ரவிக்குமார் (32) அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் நந்தினியுடன் வசித்து வந்தார். தந்தை செல்லையாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக ரவிக்குமார் கடந்த சனிக்கிழமை அமராவதிசாலை கிராமத்திற்கு வந்தார். நேற்று அதே கிராமத்தை சோ்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான ஆடு ஒன்று செத்தது. அந்த ஆட்டை செல்லையாவின் 2-வது மகன் கூலி வேலை பார்த்து வரும் சிவகுமார் (35) விலை பேசி வீட்டிற்கு வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
 இதனை பார்த்த ரவிக்குமார், செத்த ஆட்டை எதற்காக வாங்கி வந்தாய் என கேட்டு அண்ணணை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுெதாடர்பாக அண்ணன், தம்பிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவக்குமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்துவந்து தம்பி ரவிக்குமாரை குத்தினார். இதில் படுகாயமடைந்த ரவிக்குமாரை உறவினர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவிக்குமார் பரிதாபமாக இறந்து போனார். இந்த கொலை தொடர்பாக தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்