புதிதாக கட்டிய கழிவறை இடிப்பு; பெண் தீக்குளிக்க முயற்சி - நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவிலில் புதிதாக கட்டிய கழிவறையை இடித்ததால் அதிகாரிகள் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-04 11:41 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் அருந்ததியர் காலனியை சேர்ந்த ஒரு பெண், கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்கள் தங்கள் வீட்டின் அருகே கழிவறை கட்டி வருகிறார்கள். ஆனால் அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அங்கு சென்று கழிவறையை இடித்து அகற்றியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். அத்துடன் திடீரென அதிகாரிகள் முன் தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ய முயன்றனர். எனினும் ஆத்திரம் தீராத அந்த பெண் அதிகாரிகள் வந்த காரின் முன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண் மற்றும் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்