பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உறவினர்களிடம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை

பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உறவினர்களிடம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

Update: 2021-05-04 18:45 GMT
நாங்குநேரி:
பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உறவினர்களிடம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

கைதி கொலை

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் முத்துமனோ (வயது 27). இவர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் முத்து மனோ உள்பட சிலரை  கைது செய்து ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்து இருந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து பாளையங்கோட்டை  மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். 
அப்போது, சிறையில் முத்துமனோவை சில கைதிகள் தாக்கி கொலை செய்தனர். இதையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாகைகுளத்தில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பேச்சுவார்த்தை

அதாவது சிறை கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நிவாரண உதவி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
ஆனால் இதிலும் எந்த விதமான உடன்பாடும் ஏற்படவில்லை. 

மேலும் செய்திகள்