போலி ரூபாய் நோட்டு வழக்கில் கேரள பெண்ணின் கணவர் கைது

அருமனை அருகே போலி ரூபாய் நோட்டு வழக்கில் கேரள பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-04 19:01 GMT
அருமனை:
அருமனை அருகே போலி ரூபாய் நோட்டு வழக்கில் கேரள பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.

கேரள பெண்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிக்கம் பகுதியை சேர்ந்தவர் சிந்து (வயது 34). இவர் களியக்காவிளை அருகே கோட்டவிளாகம் அனுபநகர் பகுதியில் வசித்து வந்தார். மேலும் அவர் நடத்தி வந்த நிதி நிறுவனம் மூலம் தொழில் அதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை கடன் தருவதாக கூறி முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக காரில் 3 இரும்பு பெட்டிகளில் சிந்து ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தார். அப்போது, சிந்துவை அருமனை போலீசார் பிடித்தனர். அவர் கொண்டு வந்த பணத்தை பரிசோதித்த போது, அது போலி ரூபாய் நோட்டு என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவர் கொண்டு வந்த 2 ஆயிரம் மற்றும் 500 போலி ரூபாய் நோட்டுகளை கத்தை-கத்தையாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

கணவர் கைது

அப்போது தான் சிந்துவின் கணவர் உள்பட பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் மற்றவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிந்துவின் கணவர் ஷிபு (38). மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஷிபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் கத்தை-கத்தையாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் ஷிபு மீது வழக்கு பதிவு செய்து அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்