குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 2 பேர் சாவு

உளுந்தூர்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Update: 2021-05-06 16:47 GMT
உளுந்தூர்பேட்டை, 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழனியாபுரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது உறவினர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிக்காடு கிராமத்தில் தங்கி கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 
நேற்று காலை ராஜாவின் மகள் ஷாலினி (வயது 14), உறவினர் செல்வி (37) மற்றும் மேகலா (30) ஆகியோர் அதே பகுதியில் உள்ள கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ஷாலினி தண்ணீரில் மூழ்கினாள்.

2 பேர் சாவு

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வி, மேகலா ஆகியோர் சிறுமியை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குட்டையில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 
இதில் தண்ணீரில் மூழ்கியதில் செல்வியும், ஷாலினியும் இறந்தது தெரிந்தது. இதையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மேகலா சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

மேலும் செய்திகள்