கொரோனாவுக்கு மருந்தாளுநர் உள்பட 4 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மருந்தாளுநர் உள்பட 4 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட 478 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் தினசரி பாதிப்பு தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

Update: 2021-05-09 19:27 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 478 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் பெங்களூரு, ஆந்திரா, ஜார்க்கண்ட், கேரளா ஆகிய இடங்களில் இருந்து கடலூர், கம்மாபுரம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி வந்த 7 பேருக்கும், சென்னை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கடலூர், புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, மங்களூர், நல்லூர், நெய்வேலி ஆகிய இடங்களுக்கு வந்த 35 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

415 பேர் குணமடைந்தனர்

இது தவிர நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 72 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த டாக்டர் உள்பட 364 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. தினசரி பாதிப்பு தொடர்ந்து உச்சம் தொட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 நேற்று முன்தினம் வரை 30 ஆயிரத்து 491 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 415 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் வரை 357 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், நேற்று 3 பேர் பலியானார்கள். இதன் விவரம் வருமாறு:-

3 பேர் பலி

சிதம்பரத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 55 வயது ஆண் ஆகிய 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், விருத்தாசலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி கடலூர் அரசு மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 
அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மருந்தாளுநர்

இதேபோல் புவனகிரி அருகே உள்ள வடகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவர், கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆர்.பி.எஸ்.கே மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதன் மூலம் பலி எண்ணிக்கை 361 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதித்த 1800 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 604 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுப்பாட்டு பகுதி 100 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்