கிணற்றில் தவறி விழுந்த மாணவனின் கதி என்ன?

கிணற்றில் தவறி விழுந்த மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். அவருடைய நிலை என்ன? என்பது தெரியவில்லை.

Update: 2021-05-13 19:58 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பெரியசாமி (வயது 15). பள்ளி மாணவரான இவர் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் உள்ள தனது பாட்டியான அன்னக்கொடி என்பவர் வீட்டிற்கு வந்தார். நேற்று பெரியசாமி செங்குணம் கிராமத்தின் ஊர் எல்லையில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அவா் கிணற்றில் தவறி விழுந்து மூழ்கினார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள், அந்த கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பெரியசாமி கிடைக்கவில்லை. இதனால் அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. கிணற்றில் 60 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளதால் உடனடியாக பெரியசாமியை மீட்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 4 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இரவு நேரம் என்பதால் பெரியசாமியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்