தண்டவாளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு பிளஸ்-1 மாணவர் பலி
ரெயில் தண்டவாளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற பிளஸ்-1 மாணவர், ரெயிலில் அடிபட்டு பலியான சம்பவம் திருவொற்றியூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். பெயிண்டரான இவருடைய மகன் ராகுல் (வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் ராகுல் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது பந்து எதிர்பாராதவிதமாக அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்தது.
கொரோனா ஊரடங்கால் குறைந்த அளவிலேயே ரெயில்கள் இயக்கப்பட்டதால் ராகுல், கவனக்குறைவாக தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பந்தை எடுக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராகுல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொருக்குபேட்டை ரெயில்வே போலீசார், பலியான மாணவர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துவிட்டு, மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.