கொரோனா பாதிப்பால் கணவர் சாவு: தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு 2 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கொரோனா பாதிப்பால் கணவர் பலியாகி விட்டதால் விரக்தி அடைந்த தாய், தனது 2 மகள்களுடன் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். 3 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2021-05-16 23:30 GMT
பெரம்பூர், 

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 52). அரிசி வியாபாரி. இவருடைய மனைவி புவனா (48). இவர்களுக்கு ரம்யா (24), ஆர்த்தி (22) என 2 மகள்கள் உள்ளனர். இதில் ரம்யா, பல் டாக்டர் ஆவார். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

கொரோனா பாதிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் இறந்துவிட்டார். கணவரின் இழப்பை தாங்க முடியாத புவனா, தனது 2 மகள்களுடன் வீட்டில் தனியாக பரிதவித்து வந்தார். இதனால் இவர்கள் 3 பேருக்கும் உறவினர் ஒருவரே சாப்பாடு சமைத்து கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் அவர்களது உறவினர் வழக்கம்போல் சாப்பாடு கொடுக்க வந்தார். வீட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு தாய் மற்றும் 2 மகள்கள் என 3 பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 3 பேரும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு இருப்பதாக தெரிவித்தனர். தற்போது 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சென்னை ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கணவர் சுரேஷ் கொரோனாவால் இறந்து விட்டதால் விரக்தி அடைந்த புவனா, தனது மகள்களுடன் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்