மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.

Update: 2021-05-17 12:21 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவு உள்ளன. தற்போது கொரோனா பரவல் தீவிரமாகி நாளுக்குநாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் படுக்கை வசதியுடன் புதிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இதேபோல சீர்காழி அருகே புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

புதிய கொரோனா சிகிச்சை மையம்

இந்தநிலையில் மயிலாடுதுறையில் கூடுதலாக தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த சிகிச்சை மையத்தை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகரன் முன்னிலையில், தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது தருமபுரம் ஆதீன கல்லூரி முதல்வர் சாமிநாதன் மற்றும் ஆதீன அலுவலர்கள், கல்லூரி நிர்வாகிகள் இருந்தனர்.

மேலும் செய்திகள்