வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-05-17 21:26 GMT
துவரங்குறிச்சி
சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டி அருகே உள்ள வலைப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 34). இவர், கடந்த 14-ந் தேதி இரவு வளநாடு போலீஸ் பகுதி கீரணிப்பட்டியில் உள்ள குளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக பிச்சைமணி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதாவது பிச்சைமணியின் சகோதரர் முருகையன் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இறந்த முருகையனின் மருமகனான எஸ்.புதூரைச் சேர்ந்த மகேந்திரபிரபு (33) என்பவருக்கு முருகையன் தன்னுடைய சரக்கு வேனை கொடுத்துள்ளார். முருகையன் இறந்து விடவே, தன்னுடைய கணவர் கொடுத்த சரக்கு வேனை திரும்பி தந்து விடும்படி மருமகன் மகேந்திரபிரபுவிடம் மணிமேகலை கேட்டுள்ளார். இதேபோல, பிச்சை மணியும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரபிரபு மற்றும் அவரது தம்பி கார்த்திக் (25), உறவினர் மகேஷ் என்கிற மகேஷ்வரன் (23) ஆகியோர் சிறுகனூரில் பிச்சைமணியை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக பிச்சைமணி ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த 3 பேரும் பிச்சைமணியை கொலை செய்துள்ளனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்