கணவருடன் தகராறு குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-19 11:04 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த செஞ்சி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 24). இவருக்கும் பாலவாக்கத்தை சேர்ந்த நாகம்மாள் (20) என்பவருக்கும் திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகன் எல்லையா (1). கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கொய்யா தோப்பில் வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன்் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

மகனை கொன்று தற்கொலை

இதனால் மனமுடைந்த நாகம்மாள் தனது மகன் எல்லையாவுக்கு கொக்கு மருந்தை (விஷம்) கொடுத்து தானும் குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகம்மாள் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும், குழந்தை எல்லையா ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.

தாயும், மகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக நாகம்மாளின் தாய் அமுலு (44) பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்