ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியிடம் தாலிசங்கிலி திருட்டு மரித்து போன மனிதநேயம்

ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிசெயின் திருடப்பட்டது.

Update: 2021-05-23 16:26 GMT
புதுச்சேரி, 

மரக்காணம் கோபாலபுரத்தை சேர்ந்தவர் விக்டோரியா (வயது 72). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் விக்டோரியாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். கொரோனா மையத்துக்குள் உறவினர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே அவரது உடலை குடும்பத்தினர் அடையாளம் காண சென்றனர். அப்போது விக்டோரியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தாலி சங்கிலியில் இருந்த ஒரு தங்க காசு மட்டும், விக்டோரியா உடல் மீது கிடந்தது. இதுகுறித்து விக்டோரியாவின் மகன் ஜான்பீட்டர், ஜிப்மர் நிர்வாகத்திடம் கேட்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்பீட்டர் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்