ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 1,140 வாகனங்கள் பறிமுதல்; ரூ.6 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 1,140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-05-28 22:09 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 1,140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
சோதனைச்சாவடி
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 13 நிலையான சோதனைச்சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 
மேலும் மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதிகள் மூடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்கள் பறிமுதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 350 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 30 பேர் மீதும், ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,100 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் வாகன ஓட்டிகளிடம் இருந்து 1,100 இருசக்கர வாகனங்களும், 40 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 1,140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் அபராதமும் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முழு ஊரடங்கை மீறி யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்