ஐதராபாத்தில் இருந்து 58 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தது

ஐதராபாத்தில் இருந்து 58 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தது.

Update: 2021-05-30 01:01 GMT
ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

அதன்படி மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் தமிழகத்துக்கு இதுவரை 83 லட்சத்து 39 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளும், 14 லட்சத்து 82 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகளும் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 80 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து 58 ஆயிரத்து 400 ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் விமானத்தில் சென்னை வந்தது. பின்னர் அவற்றை தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசின் கிடங்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனா். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்