நாகூர் அருகே, பனை மரத்தில் இருந்து கீழே விழுந்து எலக்ட்ரீசியன் சாவு - மகன்கள் கேட்டதால் நுங்கு பறிக்க ஏறிய போது பரிதாபம்

நாகூர் அருகே மகன்கள் கேட்டதால் நுங்கு பறிக்க மரத்தில் ஏறிய போது தடுமாறி கீழே விழுந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-05-30 13:04 GMT
நாகூர்,

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த உத்தமசோழபுரம் கண்ணகி தெருவை சேர்ந்த நாரயணசாமி மகன் கலியபெருமாள் (வயது 37).இவர் உத்தமசோழபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உமாமகேஸ்வரி (32) என்ற மனைவியும், மிதுன், வேதேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை தந்தை கலியபெருமாளிடம் மகன்கள் நுங்கு கேட்டுள்ளனர்.

மகன்கள் ஆசையாக கேட்டதால் கலியபெருமாள் அவரது வீட்டின் பின்புறம் உள்ள பனைமரத்தில் நுங்கு பறிக்க ஏறி உள்ளார். அப்போது நிலை தடுமாறி மரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கலிய பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன்கள் கேட்டதால் நுங்கு பறிக்க மரத்தில் ஏறிய போது எலக்ட்ரீசியன் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்