போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா வழங்கினார்.

Update: 2021-05-30 15:45 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 

பொதுமக்கள் தேவையின்றி சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி வேடசந்தூர், எரியோடு, வடமதுரை, கூம்பூர், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு முக கவசம், கிருமிநாசினி, பி.பி.இ. கிட் ஆகிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

இதில் போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா கலந்துகொண்டு போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் தேர்தல் பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னர் அவர்களுக்கு கபசுரகுடிநீர், இனிப்பு, காரம், மிளகுபால் ஆகியவை வழங்கப்பட்டது. அதேபோல் வேடசந்தூரில் வறுமையில் வாடிய 5 ஏழை குடும்பத்தினருக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். 

கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு இதுவரை 54 ஆயிரம் முக கவசங்கள், 1000 லிட்டர் கிருமிநாசினி, 3 ஆயிரம் பேஸ் ஷீல்டு, 1000 பி.பி.இ. கிட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்