நல்லூர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

நல்லூர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம் அடைந்தார்.

Update: 2021-05-30 18:26 GMT
கந்தம்பாளையம்:
பரமத்தி தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள கரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் காய்த்ரி (வயது 19). இவர் ஏலயாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கருக்கம்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மோகன் மகன் அஜித்குமார் (21). கட்டிட தொழிலாளி. காயத்ரிக்கும், அஜித்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். 
இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி காதல் ஜோடியினர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். மகளை காணாததால் காயத்திரியின் பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காயத்ரி, நேற்று தனது காதல் கணவர் அஜித்குமாருடன் நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது அவர், தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியே ராசிபுரத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இரு வீட்டு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசினர். பின்னர் காயத்ரி, அஜித்குமாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்