மகுடஞ்சாவடி அருகே ஒன்றியக்குழு முன்னாள் தலைவர், மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை

ஒன்றியக்குழு முன்னாள் தலைவர், மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-05-30 22:04 GMT
இளம்பிள்ளை:
மகுடஞ்சாவடி அருகே ஒன்றியக்குழு முன்னாள் தலைவர், மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னதேரி கிராமம் கொட்டாய் காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி சுமதி (வயது 44). பா.ம.க. பிரமுகரான. இவர் மகுடஞ்சாவடி ஒன்றியக்குழு முன்னாள் தலைவராக பதவி வகித்துள்ளார்.
முத்துசாமி-சுமதி தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இவர்களில் 2-வது மகள் ஜமுனா (19), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றனர். 
இந்த நிலையில் நேற்று காலையில் சுமதியும், ஜமுனாவும் நீண்டநேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவர்களின் அறைக்கு சென்று பார்த்தனர். 
தூக்குப்போட்டு தற்கொலை
அப்போது சுமதியும், அவரது மகள் ஜமுனாவும் சேலையால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
உடனடியாக அங்கு விரைந்து வந்த கொங்கணாபுரம் போலீசார், தாய், மகள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
காரணம் என்ன?
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் மகுடஞ்சாவடி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்