அண்ணா நகர் பகுதி தடுப்பு வைத்து அடைப்பு
நெகமத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அண்ணா நகர் பகுதி தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
நெகமம்,
நெகமம் பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் புதிதாக 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர்களை சுகாதாரத்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் ஒருசிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து அண்ணா நகர் பகுதியை பேரூராட்சி நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, தடுப்பு வைத்து அடைத்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது, வெளியாட்கள் உள்ளே வரக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவினர். தொடர்ந்து அந்த பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.