கள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனை தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் 25 வாகனங்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சியில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் 3 ஆட்டோக்கள் உள்பட 25 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-31 17:38 GMT
கள்ளக்குறிச்சி

வாகன சோதனை

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையொட்டி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிக்க துருகம் சாலை, சேலம் மெயின்ரோடு, கச்சிராயப்பாளையம் சாலை, சங்கராபுரம் மெயின் ரோடு ஆகிய சாலைகளின் குறுக்கே தடுப்புகள் அமைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், மணிகண்டன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

25 வாகனங்கள் பறிமுதல்

இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து வாங்குவதற்கு வானங்களில் வருபவர்களை செல்ல போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களை எச்சரித்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல்செய்தனர். அதன்படி கள்ளக்குறிச்சியில் நேற்று ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த 3 ஆட்டோக்கள், ஒரு மினி லாரி, 21 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்களை பறிமுதல் செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்