மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி அருகே மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-05-31 17:54 GMT
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மீன்பிடி தடைக்காலம் 
மீன்களின் இனப்பெருக்க காலத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நிவாரண தொகைக்காக விண்ணப்பித்து 3 ஆண்டுகள் ஆகியும் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் இருக்கும் மீனவர்களுக்கு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கன்னியாகுமரி அருகே கோவளம் கடலில் இறங்கி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோஷம் எழுப்பினர்
சங்க மாவட்ட துணைத்தலைவர் தனீஷ் தலைமை தாங்கினார். இதில் மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கைகளில் கொடிகளை பிடித்தப்படி கடலில் இறங்கி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்