திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
திருவண்ணாமலையில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை
இடி- மின்னலுடன் பலத்த மழை
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற பிறகாவது வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். கடந்த சில நாட்களாக 102 டிகிரி வரை வெயில் பதிவாகி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வெயில் அடித்தது.
இரவு சுமார் 11 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை சுமார் 1½ மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. தொடர்ந்து சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் அக்னி நட்சத்திர வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழையளவு
அதேபோல் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 67.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
போளூர்- 66.6, திருவண்ணாமலை- 38, சேத்துப்பட்டு- 34.4, தண்டராம்பட்டு- 21, ஜமுனாமரத்தூர்- 20, கீழ்பென்னாத்தூர்- 15.2, செங்கம்- 8.4, ஆரணி- 5, செய்யாறு- 2.
119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 80.12 அடி தண்ணீர் உள்ளது. 60 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையில் 26.8 அடி தண்ணீர் உள்ளது. 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத்தோப்பு அணையில் 49.99 அடி தண்ணீர் உள்ளது.