விலங்குகளுக்கு உணவு அளித்த துணை போலீஸ் கமிஷனர்

நெல்லையில் விலங்குகளுக்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் உணவு வழங்கினார்.

Update: 2021-05-31 19:58 GMT
நெல்லை:
நெல்லை நகரம் முழுவதும் கொரோனா காலத்தில் உணவில்லாமல் அவதிப்படும் விலங்குகளுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர். நெல்லை டவுன், நெல்லை சந்திப்பு, பாலபாக்ய நகர், வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், பாளையங்கோட்டை மார்க்கெட், சாந்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் அவதிப்படும் விலங்குகளுக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்தளவு உணவளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், நெல்லை சந்திப்பு பகுதியில் விலங்கு நல தன்னார்வலர்களோடு இணைந்து, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு) சீனிவாசன் விலங்குகளுக்கு உணவு வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தற்போது கொரோனா காலத்தில் நகரப்பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றன. எனவே அவைகளுக்கு நீங்கள் உங்களால் முடிந்த அளவு உணவும், தண்ணீரும் கொடுத்து உதவ வேண்டும்’ என்றார். இதில் நெல்லை டவுன் உட்கோட்ட உதவி கமிஷனர் சதீஷ் குமார் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்