ரூ2 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்

பழனி முருகன் கோவில் சார்பில் ரூ.2 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

Update: 2021-05-31 21:16 GMT
பழனி : 

பழனி ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், வணிகர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் பழனி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டருடன் கூடிய ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரம் பொருத்தப்பட்டது. 

இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். 

மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, வேலுச்சாமி எம்.பி., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரத்தின் பொத்தானை அழுத்தி அமைச்சர் தொடங்கி வைத்தார். 


பின்னர் அமைச்சர் கூறுகையில், பழனி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். 

ஆக்சிஜன் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் பழனி முருகன் கோவில் சார்பில் ரூ.2 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பழனியில் அமைக்கப்பட உள்ளது. 

இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தின் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றார். 

நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. ஆனந்தி, தாசில்தார் வடிவேல்முருகன், நகராட்சி ஆணையர் நாராயணன் (கூடுதல் பொறுப்பு), மருத்துவமனை அலுவலர் டாக்டர் உதயக்குமார், வட்டார சுகாதார அலுவலர் ராஜேஸ்வரி, சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதாசுப்புராஜ் மற்றும் ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்