கிருஷ்ணகிரியில் மனைவியை கொன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்

கிருஷ்ணகிரியில் மனைவியை கொன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்

Update: 2021-06-01 00:27 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். மாரடைப்பால் இறந்ததாக அவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவி
கிருஷ்ணகிரி தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். ரமேஷ், கிருஷ்ணகிரி டேம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ராஜலட்சுமி வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ரமேஷ் கூறினார். ஆனாலும் அவரது சாவில் சந்தேகம் உள்ளது என கருதிய போலீசார், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ராஜலட்சுமியின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததைபார்த்தனர்.
கொலை
இதையடுத்து போலீசார் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் குடும்ப தகராறில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பின்னர் கொலையை மறைக்க மாரடைப்பால் இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து ரமேசை போலீசார் நேற்று கைது செய்தனர். முதலில் 174 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரியில் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=====

மேலும் செய்திகள்