வீட்டில் சாராயம் வைத்திருந்தவர் கைது
வீட்டில் சாராயம் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இந்நிலையில் அப்பகுதியில் சாராய ஊறல் போட்டுள்ளதாக, ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அப்பகுதியில் சென்று சோதனையிட்டனர். அப்போது பாலகிருஷ்ணனின் நிலத்தின் அருகில் உள்ள ஓடையில் 100 லிட்டர் பிடிக்கக்கூடிய பேரலில் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அதே இடத்தில் போலீசாரால் அழிக்கப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
இதேபோல் இலையூர் கண்டியங்கொல்லையை சேர்ந்த வீரமணி(வயது 25) வீட்டில் அரை லிட்டர் சாராயம் வைத்திருந்ததை ஜெயங்கொண்டம் போலீசார் கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர்.