திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் கொரோனா தொற்று பரவலை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சாலட்சுமி தலைமையில் போலீசார் தினமும் தீவிர வாகன சோதனயில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போலீசார் பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி சிலர் இருசக்கர வாகனங்களில் சுற்றி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர்கள் உரிய காரணமின்றி சுற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதே போல கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்தனர். கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியில் விதிகளை மீறியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள்களை கூவத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். அணைக்கட்டு போலீசார் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.