கொரோனா நிவாரணமாக ரூ.15 கோடியில் 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் வழங்கினர்

கொரோனா நிவாரணமாக ரூ.15 கோடியில் 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

Update: 2021-06-07 23:59 GMT
சென்னை,

இந்தியாவில் கொரோனா நிவாரணத்துக்காக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கம் ரூ.15 கோடிக்கு மேல் நிதியை திரட்டினர். இதன் மூலம் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்குவதற்கான ஆணையை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடியிடம் வழங்கினர்.

அப்போது தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் எம்.ஏ.சித்திக், துணை ஆணையர் (பணிகள்) மேகநாத ரெட்டி, முன்னாள் மாணவர்கள் துறை டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, முன்னாள் மாணவர்கள் தொண்டு அறக்கட்டளை செயலாளர் அலமேலு, தலைமை நிர்வாக அதிகாரி கவிராஜ் நாயர், முன்னாள் மாணவி ரேகா ரங்கநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பதிவாளர் ஜேன் பிரசாத், வென்டிலேட்டர் போன்று 74 பைபாப் யூனிட்டுகளை சமீபத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தெலுங்கானா அரசுக்கு 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல்கள் சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்