ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வெயில் அடித்தது. மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. மதியம் 1 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை சுமார் 2 மணி நேரம் கனமழையாக பெய்தது. இதனால் ஊட்டி கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சந்திப்பு, பிங்கர்போஸ்ட், மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனையாமல் இருக்க அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்தவர்கள் ஒதுங்கி நின்றனர்.
மேலும் சிலர் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர்.
ஊட்டி நகரில் 2 மணி நேரம் பெய்த தொடர் மழையால் கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.