மண் மாதிரி சேகரிப்பு

மண் மாதிரி சேகரிப்பு பணி ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2021-06-09 16:54 GMT
நயினார்கோவில், 
நயினார்கோவில் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகளின் வயல்களில் 792 மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கி மண்ஆய்வு சார்ந்த உரப் பரிந்துரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண் வள அட்டையில் மண்வளத்தின் நிலை, பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் மண் வள இடர்பாடுகள் ஆகிய விவரங்கள் அடங்கி யிருக்கும். மேலும் நீடித்த மகசூல் பெற உதவும் சமசீர் உரமிடுதல், அங்கக, ரசாயன உரங்களையும் ஒருங்கிணைத்து பயன்படுத்துதல், இடம் சார்ந்த உர பரிந்துரை போன்ற மண் திருத்த உத்திகள் கொண்டிருக்கும். எனவே விவசாயிகள் பயிர் அறுவடை முடிந்த பிறகு அடுத்த பயிருக்கு தயார் செய்வதற்கு முன்பாக மண் மாதிரிகள் எடுக்கலாம்.நெல், ராகி, கடலை போன்ற குட்டை வேர் பயிருக்கு 15 செ.மீட்டர் ஆழத்திலும் பருத்தி, கரும்பு, மிளகாய் போன்ற ஆழமான வேர் பயிருக்கு 22.5 செ. மீட்டர் ஆழத்திலும் தென்னை, பழ மர பயிர்களுக்கு 30,60,90 செ.மீட்டர் ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் தனியாக சேகரிக்க வேண்டும். அக்கிரமேசி கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கர மணியன், வேளாண்மை உதவி இயக்குனர் நாக ராஜன் ஆகியோர் மண் மாதிரி சேகரிப்பு பணியை ஆய்வு செய் தனர். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் நயினார்கோவில் கே.வி. பானு பிரகாஷ், உதவி வேளாண்மை அலுவலர் லாவண்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் தங்கவேல் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்