கடலூர் துறைமுகத்தில் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க செல்ல தயாராகும் மீனவர்கள் படகுகள் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது

தடைகாலம் முடிந்த பின்னர் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயராகி வருகிறார்கள். இதற்காக தங்களது படகுகளை சீரமைக்கும் பணியில் முழுவீச்சில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-06-09 17:08 GMT
கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், ராசா பேட்டை, சித்திரை பேட்டை, உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். 

அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை கடலூர் துறைமுக பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்து வந்தனர். நாளொன்றுக்கு சராசரியாக 100 டன் அளவிற்கு மீன் வரத்து இருக்கும்.

இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல், ஜூன் 14 வரை 61 நாட்கள், மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடை காலம் சிறிய ரக பைபர் படகு மீனவர்களுக்கு பொருந்தாது. எனவே அவர்கள் மட்டும் வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். 

படகுகள் சீரமைப்பு

இதற்கிடையே இதுபோன்ற தடை காலத்தில் விசை படகு மீனவர்கள் தங்களின் படகுகளை சீரமைப்பது, பழுது பார்ப்பதும், வர்ணம் பூசுவது, மற்றும் மீன்பிடி வலைகளை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கமாகும்.

தற்போது  உள்ள மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி, கடலூர் துறைமுக பகுதி மீனவர்கள் தங்களின் மீன்பிடி விசைப் படகுகளை பழுது பார்ப்பது, சீரமைப்பது, மற்றும் புதிய வர்ணம் பூசுவது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் மூலம் தடைகாலம் முடிந்த பிறகு எப்போது வேண்டுமானலும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க கடலூர் துறைமுக மீனவர்கள் தங்களை முழுவீச்சில் தயார் செய்து வருகிறார்கள். இதனால் துறைமுக பகுதி பரபரப்புடன் இயங்கி வருகிறது.

மேலும் செய்திகள்