சூறாவளிகாற்றுக்கு வாழைகள் சேதம்

மடத்துக்குளம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிகாற்றுக்கு வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Update: 2021-06-09 17:52 GMT
மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிகாற்றுக்கு வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
வாழைகள் சேதம்
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியான கடத்தூர், கணியூர், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, மைவாடி, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி, காரதொழுவு, மடத்துக்குளம், போன்ற பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறாவளிக் காற்று வீசி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தூர் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றிற்கு, 50 ஆண்டு பழமையான மரம் ஒன்றும், மற்றும் தோப்பில் உள்ள தென்னை மரம் ஒன்றும், வேரோடு முறிந்து விழுந்தது.
மேலும் உடுமலை- மடத்துக்குளம் எல்லைப்பகுதியான தாந்தோணி பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றிற்கு, இப்பகுதியிலுள்ள வாழை மரங்கள் இரண்டாக முறிந்து சாய்ந்தன.
இதுகுறித்து தாந்தோணி பகுதியில் உள்ள வாழை விவசாயிகள் கூறியதாவது;-
விவசாயிகள் வேதனை
மடத்துக்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் அளவுகடந்த சூறாவளிக்காற்று, அவ்வப்போது கடுமையாக  வீசி வருகிறது. இதனையடுத்து இப்பகுதியில் உள்ள, எங்களது வாழை மரங்கள் இரண்டாக முறிந்து சாய்ந்துவிழுகின்றன. வாழை மரங்கள் சூறாவளிக்காற்றில் சேதம் அடையாமல் இருக்க ஒவ்வொரு வாழை மரங்களுக்கும், குச்சிகள் துணையோடு மரத்தில் இணைத்து கட்டப்பட்டு பாதுகாத்து வருகின்றோம். 
ஆனாலும் பலமாக வீசும் காற்றுக்கு வாழை மரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல், இரண்டாக முறிந்து சாய்ந்து விழுகின்றன. இதனால் வாழைத்தார்கள் மற்றும் வாழை மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்