சமூக இடைவெளியை மறந்த கொரோனா நோயாளிகள்
சமூக இடைவெளியை மறந்த கொரோனா நோயாளிகள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தொற்று உறுதியானவர்கள் அரசு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கு நோயாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர 3 வேளையும் சத்தான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே உணவு வழங்கும் நேரங்களில் கொரோனா நோயாளிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்கின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நபர்களுக்கும், நோயின் தன்மை தீவிரமாக வாய்ப்பு உள்ளது. எனவே, சிகிச்சை மையங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.