வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

முதுமலையில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

Update: 2021-06-09 18:17 GMT
கூடலூர்,

முதுமலையில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகள் மூடப்பட்டது. 

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து கூடலூருக்கு இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அடியோடு குறைந்து விட்டது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

புள்ளி மான் கூட்டம்

கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி, தெப்பக்காடு, கக்கநல்லா மற்றும் மசினகுடி வழியாக செல்லும் சாலைகளில் காட்டுயானைகள் குட்டிகளுடன் உலா வருகிறது. மேலும் புள்ளி மான் கூட்டமாக சாலையோரம் பசும் புற்களை மேய்ந்து வருகிறது. 

இதற்கு ஏற்ப கூடலூர், முதுமலை பகுதியில் பரவலாக மழை பெய்வதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் பசுந்தீவனத்தை தின்றுவிட்டு சாலையோரம் உள்ள மரங்களின் நிழலில் மான்கள் கூட்டமாக படுத்து ஓய்வு எடுப்பதை அதிகளவு காண முடிகிறது.

மேலும் செய்திகள்