இரு தரப்பினர் ேமாதல்;அதிகாரிகள் சமரசம்

கொரோனா தொற்றால் தெருக்கள் மூடப்பட்டதால் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். அதிகாரிகள் சமரசத்தால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Update: 2021-06-09 18:20 GMT
குமாரபாளையம்
கொரோனா தொற்றால் தெருக்கள் மூடப்பட்டதால் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். அதிகாரிகள் சமரசத்தால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. 
கொரோனா தொற்று
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டாபாளையம் ஊராட்சி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எம்.ஜி.ஆர். நகர் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தெருக்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் எம்.ஜி.ஆர். நகர் தெரு மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல், குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் தெரு வழியாக இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் செல்கின்றனர். இதற்கு பாரதிநகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இரு தரப்பினர் மோதல்
மேலும் எம்.ஜி.ஆர். நகர் மக்கள் வர முடியாத அளவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் எம்.ஜி.ஆர்.நகர் தெருவில் இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு அடைக்கப்பட்ட பகுதி திறந்து விடப்பட்டது.
மேலும் நகராட்சி எல்லைப்பகுதியான பாரதி நகர் தெருவில் தடை செய்யப்பட்ட பகுதி என தகரங்கள் மூலம் அடைக்கப்பட்டது. மேலும் ஊராட்சி பகுதி மக்கள், நகராட்சி எல்லைக்குள் வரக்கூடாது. அதையும் மீறி வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர். இந்த சம்பவத்தால் குமாரபாளையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்