கொரோனா ஊரடங்கை மீறிய 281 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறிய 281 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-10 17:40 GMT
கரூர்
வாகன சோதனை 
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசர தேவைகளை தவிர்த்து வெளியிடங்களில் சுற்றித்திரியும் வாகனங்கள் ஆங்காங்கே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதோடு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதில், முககவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த 141 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.29 ஆயிரத்து 600-ம், பொது இடங்கள் கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது சுமார் 10 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.5 ஆயிரம்  வசூலிக்கப்பட்டது.
6 பேர் கைது
அதேபோல, ஊரடங்கை மீறி இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 123 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன. மேலும், மது பாட்டில்களை பதுக்கி விற்றதாக 5 வழக்குகள் பதியப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனர். 34 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் வெளிமாநில மதுபாட்டில்கள் 48 மற்றும் 40 லிட்டர் கள்ளச்சாராய உறல், 5 லிட்டர் தென்னை கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நொய்யல்
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், குட்டக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திந்த 30 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரேநாளில் 281 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்