நன்னிலத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை

நன்னிலத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-10 17:47 GMT
நன்னிலம்,

கொேரானா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு 14-ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ஏராளமான பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டை கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறிசொல்லி, வேடிக்கை காட்டி யாசகம் பெற்று வருவார்கள். இவர்களில் ஆண்களின் முக்கிய தொழில் மாடுகளை பழக்கி வித்தை காட்டுவது. பெண்கள் ஊசிமணி, வளையல், தோடு, திருஷ்டிகயிறு போன்ற பொருட்களை ஊர் ஊராக சென்று கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் விற்று பிழைப்பு நடத்தி வருபவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் மாடுகள் இல்லாமல் வீடு, வீடாக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வரும் நிலையில் உள்ளனர்.

வாழ்வாதாரம் இன்றி தவிப்பு

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் பூம்பூம் மாட்டுக்காரர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் வருமானம் இல்லாமல் உணவு இன்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்