தென்னை, மா மரங்களை சேதப்படுத்திய யானை

வத்திராயிருப்பு அருகே தென்னை, மா மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2021-06-10 20:50 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே தென்னை, மா மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
வனவிலங்குகள் 
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. 
வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியார் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, வாழை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். 
மரங்கள் சேதம் 
பிளவக்கல் அணை பகுதி வழியாக இறங்கும் காட்டு யானைகள் ரஹ்மத் நகர், கிழவன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை, மா தோப்பிற்குள் நுழைந்து தென்னை, மா, மரங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. 
பிளவக்கல் பெரியார் அணை பகுதிக்கு செல்லும் வழியில் கருணை ஈஸ்வரன் என்பவர் 20 ஏக்கரில்  தென்னை, மா ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பிளவக்கல் பெரியார் அணை பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் தென்னை, மா மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
நிவாரணம் 
விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதாகவும், வனத்துறையினர் இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். 
அத்துடன் வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்